Sunday, March 9, 2014

" வட்டியும் முதலும் " ராஜுமுருகன் !

ண்பர் ராஜுமுருகன் அவர்களுக்கு,

வணக்கம் ! ... நண்பர் என ஆரம்பித்தாலும் வட்டியும் முதலும் படித்த லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதை தவிர உங்களுக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் கிடையாது ! ஏதுமற்ற பருவத்தை அனுபவித்த கடைசி தலைமுறை, தமிழ் காமிக்ஸின் பொற்காலத்தில் வளர்ந்தது, பிட்டுபட கிளுகிளுப்பு என் பால்யம் கிளறிய உங்களின் எழுத்துகளை படிக்கும்போது நீங்களும் என்னை போலவே எழுபதின் இறுதியிலோ அல்லது என்பதின் ஆரம்பத்திலோ பிறந்தவராகத்தான் இருப்பீர்கள் என தோன்றியது... மேலும் என் சக வயதையொத்த மனிதனுக்கு இத்தனை வாழ்வியல் அனுபவங்களா ? இவனால் மட்டும் எப்படி பிளாட்பார கழைக்கூத்தாடி முதல் பங்களா பணக்காரன் வரை அனைத்து மனிதர்களிடமும் மறைந்திருக்கும் மானுடத்தை மாசற்று பார்க்க முடிகிறது என்ற வியப்பே கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மீது கொண்ட தூரத்து நட்பாய் நண்பரே என விளிக்க வைக்கிறது !

சியில் தொடங்கி இன்பம், துன்பம்,  போராட்டம், புலம் பெயர்வு,  காதல், காமம், நட்பு, துரோகம், இளமை, முதுமை,  ஜனனம், மரணம், என உணர்வுப்பூர்வமான விசயங்கள் , சினிமா, கிரிக்கெட், டாஸ்மார்க் என மிஸ்டர் இந்திய பொதுஜனத்தின் தேசிய வலிநிவாரணிகள் வரை அனைத்தையும் பரிவு மேலோங்கும் ஒரே பார்வையில்....

வ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை ! உண்மைதான் !! உங்களின் போதை அனைத்து மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மனிதம் தேடுவது !!!
ராஜுமுருகன்

நீங்கள் அறிமுகப்படுத்திய ஸ்டான்லி மருத்துவமனை பெரியம்மா தொடங்கி பெரிய சரவணன், இசபெல்லா சிஸ்டர், ஆர்.கே.வி, பத்மனாபன், ஜீ.ஆர்.வாத்தியார், பன்னீர் சார், குணசேகரன் மாமா, நடராஜன் மாமா, பரமு, சரவணன் அண்ணன், சுனிதாக்கா, அப்பார்ட்மென்ட் கட்டிட தொழிலாளர்கள், பாலியல் தொழில் செய்த பெண், டைலர், செருப்பு தைப்பவர்  என நீங்கள் பார்த்த அனைவரையும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ஊர்களில் நாங்களும் சந்தித்திருக்கிறோமே ! எங்கள் ஒவ்வொருவரின் இதயக்குளத்தினுள்ளும் கீர்த்தனாக்களின் நினைவுக்கற்கள் சலனமற்று கிடக்கின்றனவே ! எப்படி முருகன் உங்களுக்கு சாத்தியமாயிற்று ? காலம் எங்களிடமிருந்து களவாடி ஏழுமலை ஏழுகடல்கள் தாண்டி யாரும் அறியமுடியாத இடத்தில்  ஒளித்துவைத்துவிட்ட எங்களின் தேவதைகள் அனைவரையும் தனிமனிதனாய் மீட்டுக்கொடுத்து, எங்களை உங்களின் வட்டியும் முதலுக்கு நிரந்தர கடனாளிகளாக்கிவிட்டீர்களே !

காத்திருப்புகள், வாழ்க்கை முழுவதும்...

உண்மைதான் முருகன் !

" காதல் கைக்கூடிய தருணத்தைவிட அந்த காதலுக்காக காத்திருந்த நாட்கள்தான் புனிதமானது " என ஒஷோ கூறியதுபோல காத்திருப்புகளால் நிறைந்ததுதானே வாழ்க்கை. எதற்காக காத்திருக்கிறோமோ அதற்கு தகுதியானவர்களாக நம்மை முற்றிலும் புடம்போட்டுக்கொள்ள காலம் அளிக்கும் வாய்ப்பு தானே காத்திருப்பு ?!

பொறுப்புகள், துயரங்கள், லட்சியவாதங்கள் ஏதுமற்ற, " ஏதுமற்ற பருவம் பற்றி ",  ஏதுமற்ற பருவம்  என்ற சொற்சேர்க்கை உப்யோகிக்காமல்  சிரீரங்கத்து தேவதைகளில் சிலாகித்த சுஜாதாவுக்கு பிறகு தமிழில் ஏதுமற்ற பருவத்தின் பெருமை போற்றியவர் நீங்கள்தான் முருகன் ! ராஜேந்திரன் அண்ணன் பெட்டிக்கடை தொடங்கி மனோ டைலர்ஸ், சன்மேக்ஸ் ரெக்கார்டிங் சென்ட்டர், நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளி, அம்மையார் காலேஜ், சாந்தி தியேட்டர், மாங்கனி திருவிழா, கந்தூரி, சந்தனக்கூடு வைபவங்கள், கிறிஸ்துமஸ் மெஸ் என எங்களுக்கும் அந்த ஏதுமற்ற பருவத்தில்தானே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் அனைத்தும் அறிமுகமாயின ! கணினி திரையும் தொலைக்காட்சி பெட்டியும் மட்டுமே வெளிஉலகுக்கான சாளரங்களாய் இருக்க, பிறக்கும் முன்பே பெற்றோர்களின் எதிர்காலத்திட்டங்களுக்குள் சிறைவைக்கப்படும் இன்றைய குழந்தைகளுக்கு நீங்கள் பயந்தது போலவே அந்த ஏதுமற்ற பருவச்சோலைகள் கிட்டாத வெற்று அறிவு அடைத்து ரொப்பிய பாலைவன வாழ்க்கைதான் கிட்டும் போலிருக்கிறது.


ல்லது கெட்டது என்ற பாகுபாடில்லாமல் நம் காலத்தின் அத்தனை தருணங்களையும் அழகான சிம்பொனி ஸ்வரங்களாய் நெய்துவிட்ட இளையராஜாவை பற்றி " அலைகடலும் அவரே ஆழ்கடலும் அவரே, அவரை பற்றி எழுதவே போரடிக்கிறது.... " என்ற உங்கள் எழுத்தில் தாயின் மடியில் படுத்துகொண்டு அவளின் தலைவருடல் சுகத்தில் மிதந்து கொண்டே " போதும் விடும்மா ! " என சிணுங்கும் செல்ல அலுப்பு !

ட் பண்ணா...

ஐரோப்பாவில், பாரீஸ் மாநகர்... பனிபடர்ந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் மக்கள் கூட்டம்... பணக்காரர்கள் SAMARITAINE, GALLERY LA FAYETTE போன்ற பெரும் ஷாப்பிங் மால்களில் மொய்க்க, நடுத்தர மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வரிசையில் நிற்கிறார்கள். மால்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வெளியே கடும் குளிரை பொருட்படுத்தாது கையேந்தி நிற்கும் ஏழைகள் ! உரையாடல்களை உற்று கேட்டால்... அரசியல் நிலவரம்... வேலை பிரச்சனை... நேரமின்மை... காதல்... பிரிவு.... நம்பிகை... துரோகம்... ! கண்களை மூடினால் பூகோள எல்லைகள் தொடங்கி சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தும் மறந்துவிடுகிறது. சந்தைகளும் திருவிழா கூட்டங்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன.

ட் பண்ணா...

பத்திரிக்கைகளில் உங்களின் குக்கூ பட ஸ்டில்ஸ்... படத்தின் ட்ரெய்லர், டீஸர் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்ற செய்தி... உங்களின் படம் நிச்சயமாய் தமிழ் சினிமாவை இன்னுமொரு படி மேலேற்றும். நீங்கள் நேசிக்கும் சினிமாவில் உங்களுக்கென ஒரு உயர்ந்த இடம் நிச்சயம். அது உங்களின் காத்திருப்புக்கு கிடைக்கப்போகும் வெற்றி.




ஒன்றை கவணித்தேன். எந்த செய்தியிலும் புதிய இயக்குனர் ராஜுமுருகன் என குறிப்பிடவில்லை. எழுத்தாளர், வட்டியும் முதலும் ராஜுமுருகன் என்றுதான் குறிப்பிடுகிறார்கள் ! உண்மைதான் முருகன் ! வட்டியும் முதலும் மூலமாய் எழுத்தாளராய் தமிழுக்கு மிகமுக்கியமான பங்களிப்பை தந்துள்ளீர்கள் என்றால் அது மிகையாகாது.

ட் பண்ணா...

பெருநதியின் கரையில் உங்களுடன் நாங்களும் விளையாடிக்கொண்டிருக்கிறோம்... " எதுவும் கடந்துபோகும் "  என சலசலக்கும் நதியலை... இருட்டி வெகு நேரமாகிவிட்டது...

" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை என்பதற்கான சாட்சி " என்ற ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் மனதில் எதிரொலிக்கிறது...

உங்கள் கையில் பேரொளி வீசும் அன்பு விளக்கு ! தூரத்தில் விடியலின் வெளிச்சம் !

நட்புடன்
சாமானியன்.

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.




விகடன் பிரசுரம்
           757, அண்ணா சாலை,
    சென்னை - 600 002